புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, ‘சரண்டர் மோடி,’ என்று ராகுல் கிண்டல் அடித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணும் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். கல்வான் சம்பவம் பற்றி விளக்கம் அளிப்பதற்காக கடந்த 19ம் தேதி கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில், ‘`இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. எந்த நிலப்பகுதியும் ஆக்ரமிக்கப்படவும் இல்லை,’ என்று மோடி தெரிவித்தார். இதற்கும் பதிலடி கொடுத்த ராகுல், ‘அப்படி என்றால், நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? எந்த இடத்தில் கொல்லப்பட்டனர்?’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், எல்லை பிரச்னையில் சீனாவிடம் மோடி சரண்டைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், ‘ஜப்பான் டைம்ஸ்’ நாளிதழில் வெளியாகி உள்ள `சீனாவின் அராஜகமும், இந்தியாவின் சமரசகொள்கையும்’ என்ற கட்டுரையை ராகுல், தனது டிவிட்டரில் நேற்று பகிர்ந்துள்ளார். அத்துடன், ‘இந்திய பகுதியை சீனா 2வது முறையாக ஆக்கிரமித்துள்ளது. இனியாவது, இந்தியா தனது கொள்கையை மாற்றுமா? லடாக் எல்லையில் சீனாவிடம் பிரதமர் சரணடைந்து விட்டதால் இனி அவர் நரேந்திர மோடி அல்ல; சரண்டர் மோடி.’ என்று கிண்டலும் அடித்துள்ளார்.